OUR LIFE IS ISLAM
Monday, June 6, 2016
துஆக்கள் ஏன் அங்கீகரிக்கப்படுவதில்லை?
ரியாத் சுல்தானா இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் வழங்கிய ரமலானை வரவேற்ப்போம்… சிறப்பு நிகழ்ச்சி சிறப்புரை: மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் – அழைப்பாளர், ராக்காஹ் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் நாள்: 20-05-2016, வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை. இடம்: சுல்தானா தஃவா நிலையம், ரியாத் சவுதி அரேபியா.
Saturday, May 28, 2016
ரமழானில் இறைவணக்கம் சில வழிகாட்டல்கள்.
ரமழானில் இறைவணக்கம் சில வழிகாட்டல்கள்
உரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்
நாள் : 26-05-2016 வியாழக்கிழமை
இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.
உரை: மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன்
நாள் : 26-05-2016 வியாழக்கிழமை
இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.
Tuesday, May 10, 2016
ஒப்பிட்டுப்பாருங்கள் மறுமையின் விசாலத்தையும் உலகின் அற்பத்தையும்
ஒப்பிட்டுப்பாருங்கள் மறுமையின் விசாலத்தையும்உலகின் அற்பத்தையும்.
Speach By Moulavi Arham Ihsani
ஒப்பிட்டுப்பாருங்கள் மறுமையின் விசாலத்தையும்உலகின் அற்பத்தையும்.
Speach By Moulavi Arham Ihsani
Thursday, May 5, 2016
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-4)
நளினத்தின் பெயரில் நன்மையை மறைக்கலாமா?
அல்லாஹுத் தஆலா பிரச்சாரத்திற்காக நபிமார் களான மூஸா(அலை), ஹாரூன்(அலை) ஆகியோரைப் பிர்அவ்னிடம் அனுப்பும்போது “நீங்கள் அவனுக்கு நளினமாகவே உபதேசம் செய்யுங்கள். அதனால் அவன் நல்லுணர்ச்சி பெறலாம். அல்லது நடுக்கமடையலாம்” (20:44)
எனக் கூறி அனுப்புகின்றான். பிர்அவ்னிடமே நளினமாகப் பேசவேண்டுமென்றால் எமது சமூகத்துடன் நாம் பிரச்சாரத்தில் எவ்வளவு நளினமாக நடக்க வேண்டும் என்பதைச் சிந்திப்பவர்கள் உணரமுடியும். மக்கள் காலம் காலமாக நம்பி நடைமுறைப் படுத்தி வரும் சடங்கு சம்பிரதாயங்களையும், ஷிர்க்கு, பித்அத்துக்களையும் கூடாதவை என பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்வது நளினமான பிரச்சாரமாகாது. அதில் சற்று விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும் எனக் கூறி அதன் மூலம் மார்க்கத்தின் சில பகுதிகளை மறைக்கும் பிரச்சார அணுகுமுறையை சகோதர அழைப்பாளர்கள் நியாயப்படுத்த முற்படுகின்றனர்.
பிரச்சாரத்தில் நளினம் தேவை என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், நளினம் என்பதற்கு சத்தியத்தில் சில பகுதிகளைச் சொல்லாமல் மறைத்தல் என்றோ அல்லது “தியரி” போட்டு ஐந்து, பத்து ஆண்டுகளுக்குப் பின் சொல்லவென “ஸ்டோக்” (stock) பண்ணல் என்றோ பொருள் கொள்ளமுடியாது, ஏனெனில் நளினமாகப் பேசுங்கள் எனக் கட்டளையிட்ட அதே அல்லாஹ் நளினமாக எதைச் சொல்லவேண்டும் என்பதையும் அதனைத் தொடர்ந்து கற்றுக் கொடுக்கிறான்.
“எனவே, அவனிடம் நீங்களிருவரும் வந்து” நிச்சயமாக நாங்கள் உன்னுடைய ரப்பின் ரஸூல்கள் இருவர் (ஆவோம்) ஆகையால் இஸ்ராயீலின் மக்களை எங்களுடன் அனுப்பிவைப்பாயாக! அவர்களை நீ வேதனை செய்ய வேண்டாம். உன்னுடைய ரப்பிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் திட்டமாக நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஸலாம் (சாந்தி) ஆகிறது நேர்வழியைப் பின்பற்றியவர் மீது உண்டாவதாக”! (என்று இருவரும் கூறுங்கள்) “நிச்சயமாக: எங்களுக்கு (அல்லாஹ் -விதியாக்கும்) வேதனையாகிறது (நாங்கள் கொண்டுவந்ததைப்) பொய்யாக்கி, புறக்கணித்துச் செல்பவனின் மீது உண்டாகும்.” என்று திடமாக வஹீ அறிவிக்கப்பட்டுள்ளது” (என்றும் கூறுங்கள்) (20:47,48)
இங்கு நளினம் என்ற போர்வையில் சத்தியம் மறைக்கப் பட்டுள்ளதா? என்பதைச் சற்று அவதானித்துப் பாருங்கள். உண்மைகள் உள்ளபடி எடுத்துக் கூறப்பட்டுள்ளதல்லவா? நளினமாகப் பேசுங்கள் எனக் கூறியவனே, நளினமாகப் பேசுங்கள் என்பதற்கு விளக்கம் கூறிய பின் நாம் அதற்கு மாற்று விளக்கமளிக்க முனையலாமா?
நபி மூஸா(அலை) பிர்அவ்ன் ஆகியோருக்கிடையே நடந்த உரையாடலை அல்குர்ஆனில் பல இடங்களிலும் விபரமாகக் காணலாம். ஆனால், எந்த இடத்திலும் மூஸா(அலை) அவர்கள் சத்தியத்தை மறைக்கும் போக்கில் பேசியதாகக் காண முடியவில்லை. இருப்பினும் எதிராளி ஏன் இக்கேள்வியைக் கேட்கிறான்! அவன் மன ஓட்டம் என்ன என்பதை நாடிபிடித்தறிந்து அதற்கேற்றாற்போல் பதிலளிக்கும் சாதுரியத்தை மூஸா(அலை) அவர்களின் உரையாடலில் நாம் காணலாம்.
“(முன்னர் நபிமார்களைப் பொய்ப்பித்துப் புறக்கணித்த) முந்திய தலைமுறையினர்களின் நிலை என்ன? (20:51) என்று பிர்அவ்ன் வினவுகிறான். இந்த வினா உண்மையை உணர வேண்டும் என்பதற்காக எழுப்பப்பட்டதல்ல. மூஸா(அலை) அவர்கள் மூதாதையர் சம்பந்தமாக விபரீதமாக எதையாவது கூறினால். “மக்கள் மூதாதையர்கள் மீது வைத்துள்ள மதிப்பு, பக்தி என்பவற்றைத் தூண்டிவிட்டு மூஸா(அலை) அவர்களின் பிரச்சாரத்தை முளையிலேயே கிள்ளிவிட வேண்டும் எனும் எண்ணத்திலேயே இக்கேள்வி கேட்கப்பட்டது. இதனை உணர்ந்த மூஸா(அலை) அவர்கள் பின்வருமாறு பதில் கூறுகிறார்கள்.
“அதுபற்றிய அறிவு என்னுடைய ரப்பிடத்திலுள்ள பதிவுப் புத்தகத்திலிருக்கின்றது என்னுடைய ரப்பு தவறிழைக்கமாட்டான். “(எதையும்) விட்டுவிடவும் மாட்டான்” என்று அவர் கூறினார்.” (20:52)
இப்பதில் பொய்யற்றதாகவும், எதிராளி விரித்த வலையில் விழவைக்காத சாதுரியம் மிக்கதாகவும் அமைந்திருப்பதை அவதானிக்கலாம்! இது போன்றே மூஸா(அலை) அவர்களின் உரையாடற் சாதுரியத்துக்கு இன்னுமோர் உதாரணத்தையும் கூறலாம்.
பொதுவாக எல்லா அசத்தியவாதிகளும் பேச்சால் சமாளிக்கமுடியாத போது “கெடுபிடி” நடவடிக்கைகளில் இறங்கிவிடுவர். அவ்வாறே பிர்அவ்னும் பேச்சில் ஜெயிக்க முடியாது என உணர்ந்தபோது,
“என்னைத் தவிர (வேறு) நாயனை நீர் ஆக்கிக் கொண்டால், திண்ணமாக நான் உம்மைச் சிறையிடப்பட்டோரில் உள்ளவராக்கிவிடுவேன்” என்று அவன் கூறினான். (26:29)
இந்நேரத்தில் மூஸா(அலை) அவர்கள் மிகத் தந்திரமாகப் பேச்சைத் திசை திருப்புகிறார்கள். எந்த சர்வதிகாரியாக இருந்தாலும் பலர் முன்னிலையில் தான் அநியாயக்காரன், நியாயத்துக்குக் கட்டுப்படாதவன் என்பதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள முற்படமாட்டான். தான் நீதமானவன் போலவே நடந்து கொள்வான். பிர்அவ்னும் இதற்கு விதிவிலக்கானவன் அல்லன் என்பதையுணர்ந்த மூஸா(அலை) அவர்கள்.
“தெளிவான (அத்தாட்சியாக ஒரு) பொருளை உன்னிடம் நான் கொண்டு வந்தாலுமா? (அவ்வாறு செய்வாய்)” என வினவுகிறார்கள். (26:30)“நீர் உண்மையாளர்களில் உள்ளவராக இருந்தால் அதனைக் கொண்டு வாரும்” என்று பிர்அவ்ன் கூறினான். (26:31)
இங்கே சிறையிலடைப்பேன் எனக்கூறியவனைத் தனது உரையாடலினூடாக ஆதாரத்தைக் கேட்க வைத்தார்கள்.
இவ்வாறு சாதுரியமாகப் பேசும் போக்கையே மூஸா(அலை) அவர்களிடம் காணமுடிந்ததேயன்றி விட்டுக் கொடுத்து, உண்மைகளை மறைத்துப் பேசும் போக்கை மூஸா(அலை) அவர்களிடம் காணமுடியவில்லை. எனவே, நளினமாகப் பேசுதல் என்பதற்கு மறைத்துப் பேசுதல் எனப் பொருள் கொள்ள முடியாது.
நாம் யாரோடு பேசுகிறோம் என்பதைப் புரிந்து அவர்களிடம் எப்படிப்பேசினால் எடுபடும் எனக் கணக்குப் பார்த்து நிதானமாகச் சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இதற்கு சிறந்த பல உதாரணங்களை நபி(ஸல்) அவர்களின் பிரச்சார வாழ்க்கையில் நாம் காணலாம். இதோ!
“ஒரு இளைஞர் நபி(ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, “யாரஸூலல்லாஹ் எனக்கு விபச்சாரம் புரிய அனுமதி தாருங்கள்”; என்றார். இதைக் கேட்ட அவையினர் கோபத்தோடு அவரை அங்கிருந்து விரட்டியடிக்க முற்பட்டனர். நபி(ஸல்) அவர்கள் மக்களை அமைதிப்படுத்தி விட்டு, அந்த இளைஞனை அழைத்து தமதருகில் அமரச் செய்தார்கள். உன்தாயுடனோ, மகளுடனோ, சகோதரியுடனோ, சாச்சி, மாமி ஆகியோருடனோ வேறொருவர் தகாத உறவு கொள்வதை நீர் விரும்புவீரா? எனக் கேட்டார்கள். அவர் இல்லையெனப் பதிலளித்தார். (நீர் விபச்சாரம் புரிய அனுமதி கேட்கிறீரே! நீர் தகாத உறவு கொள்ள விரும்பும் பெண்ணும் யாருக்காயினும் தாயவோ சேயாகவோ, சகோதரியாகவோ அல்லவா இருப்பாள்) நீ உனது இத்தகைய உறவினர்களுடன் வேறொருவர் தகாத உறவு கொள்வதை வெறுப்பது போல் பிறரும் தமது உறவினர்களுடன் அந்நியன் விபச்சாரம் செய்வதை வெறுப்பார்களல்லவா? எனத் திருப்பிக் கேட்டுவிட்டு அல்லாஹ்வே இவர் பாவத்தை மன்னித்து, இவர் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி, இவரது கற்பையும் பாதுகாப்பாயாக! என்று பிரார்த்தித்தும் அனுப்பினார்கள். அவரும் தனது தவறை உணர்ந்து தான் இதன் பின் இப்படியான தவறில் ஈடுபடுவதில்லை என உறுதியளித்தார்.
அறிவிப்பவர்: அபூ உமாமா.
ஆதாரம் : அஹ்மத், (பாகம்-5, பக்கம்-256,257)
அருவருக்கத்தக்க ஒரு கேள்வி கேட்கப்பட்டும்கூட சினமுறாமல், சீறி விழாமல் அன்பாக, அந்த இளைஞருக்குப் புரியும் விதமாக அண்ணலார் அவர்கள் பேசினார்கள் அல்லவா? இந்த அழகிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். இம்முறையை வேண்டுமென்றால் “ஹிக்மத்” என்றும், நளினமாகப் பேசுதல் என்றும் கூறலாம். இதைவிட்டு விட்டு சத்தியத்தை மறைக்கும் கோழைத்தனத்திற்கு “ஹிக்மத்” என்றோ, நளினம் என்றோ பெயர் சூட்டல் மடமையாகும்.
இங்கே ஆளைப்பார்த்து, அவரது நிலையைப் பார்த்து சட்டம் மாற்றப்படவில்லை. ஆனால், அவரின் அறிவுத் தரத்திற்கு ஏற்ப விளக்கும் விதம் வித்தியாசப் பட்டுள்ளது. உள்ளதை மாற்றியோ மறைத்தோ கூறக்கூடாது; உரையாடும் நபர் உணரும் விதத்தில் விபரித்துக் கூறலாம். அதுவே நமது கடமையாகும்.
இவ்விடத்தில் மற்றுமொரு இஸ்லாமிய பிரச்சார அணுகுமுறை பற்றியும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். நளினமாகப் பேசுதல் போன்றே எதிர் மறைப் பிரச்சார முறை அல்லது சாடல் போக்கும் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் உள்ளதுதான். சிலருக்குத் தடவித்தடவிக் கூறினால் விளங்கும். சிலருக்கு செவிட்டில் அறைந்தாற் போல் பட்டெனக் கூறினால் தான் சட்டெனப் புரியுமென்றால், அதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. இதோ இப்றாஹீம் (அலை) அவர்கள் பிரச்சாரத்தின் போது பாவித்த வார்த்தைகளின் வேகத்தை சற்று அவதானித்துப் பாருங்கள்.
1. “இப்றாஹீமிலும், அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்குத் திட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது, தன் சமூகத்தினரிடம் நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வையன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் நீங்கியவர்களாக இருக்கிறோம். உங்களை நாங்கள் நிராகரித்து விட்டோம், ஏகனாகிய அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் பகையும் வெறுப்பும் என்றென்றைக்குமாகத் தோன்றி விட்டன” என்று அவர் கூறினார். (அதில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.) (60:4)2. உங்களுக்கும் அல்லாஹ்வைத் தவிர்த்து நீங்கள் வணங்குபவற்றுக்கும் உஃப்புன் (நாசந்) தான். எனவே, நீங்கள் (இதனை) அறிந்து கொள்ள வேண்டாமா? (என்றும் கூறினார்) (21:67)3. “நீங்களும், உங்களுடைய மூதாதையர்களும் திட்டமாக பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறீர்கள்” என்று அவர் கூறினார். (21:54)
இவ்வார்த்தை வீச்சின் வேகத்தையும் இவ்வார்த்தைகளின் கனத்தையும், ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். எவ்வளவு சூடான வார்த்தைகள் இவைகள். இம்முறைப் பிரச்சாரத்திற்கு நபி வழியிலும் கூட நாம் பல முன்மாதிரிகளைக் காணலாம்.
எனவே, நாம் யாரை நோக்கிப் பேசுகின்றோம் என்பதையும் நமக்கும் அவருக்குமிடையேயுள்ள உடன்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள், உறவுகள் என்பவற்றிற் கேற்ப இவரிடம் உண்மையை எப்படி விளக்கினால் இலகுவில் புரிவார் என்பதை கவனமாக யூகித்து நளினமாக (மிகக் குறைந்த சில வேளைகளில் சூடாக) சத்தியத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், சத்தியத்தை மறைத்தல் என்பது “தப்லீக்”; எனும் எத்திவைக்கும் பணிக்கு நேர்மாறானது என்பது மட்டும் நிச்சயமானது.
Thursday, April 14, 2016
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-3)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
பிளவைத் தடுக்க பிரச்சாரத்தைத் தவிர்க்கலாமா?அல்லாஹ்வின் கட்டளைப்படி மூஸா(அலை) அவர்கள் தூர்சீனா மலைக்குச் செல்கையில் ஹாரூன் (அலை) அவர்களிடம் சமூகத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் சென்றதன் பின்னர் சாமிரி என்பவனின் தவறான செயலால் இஸ்ரவேலர்கள் காளைக் கன்று ஒன்றை வணங்க ஆரம்பிக்கின்றார்கள். காளைக் கன்றின் மூலம் இஸ்ரவேலர்கள் சோதிக்கப்பட்டது பற்றி மூஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்.கோபத்தோடு வந்த மூஸா(அலை) அவர்கள் “ஹாரூனே! இவர்கள் வழிகெட்டே போனார்கள் என்று நீர் அறிந்த சமயத்தில் என்னை நீர் பின்பற்றி நடக்க உம்மைத் தடைசெய்தது எது? நீர் என்னுடைய கட்டளைக்கு மாறு செய்ய முற்பட்டீரா?” (20: 92,94)
என்று கண்டித்துக்கூறி அவரின் தாடியையும், தலைமுடியையும் பிடித்து இழுத்தார். இவ்வேளையில், ஹாரூன் (அலை) “என் தாய் மகனே! என் தலையையும் தாடியையும் பிடித்திழுக்காதீர். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கிடையில் நீர் பிரிவினை உண்டு பண்ணி விட்டீர். நீர் என்னுடைய வார்த்தைகளைக் கவனிக்கவில்லை என்று நீர் என்னைக் கடுகடுப்பீர் என்று நிச்சயமாக நான் பயந்தேன்” (20:94) என்று பதிலளித்தார்கள்.
ஹாரூன்(அலை) அவர்களின் பதிலை அவதானிக்கும் போது சமூகத்தில் பிளவு ஏற்படும் என்றிருந்தால் “ஷிர்க்” எனும் கொடிய குற்றத்தைக்கூட கண்டுகொள்ளாமல் இருக்க முடியும் என்பதை உணரமுடிகின்றதல்லவா? ஒரு நபியே தன் முன்னாலேயே காளைக் கன்று வணங்கப்படுவதை பிரிவினை வந்துவிடக்கூடாது என்பதற்காக தடுக்காமல் இருந்துள்ளார் என்றால் நாம் இது விடயத்தில் எவ்வளவு நிதானப்போக்கைக் கைக்கொள்ள வேண்டும்? நாம் ஹாரூன்(அலை) அவர்களை விட மேலானவர்களா? அல்லது எம் சமூகத்தவர்கள் செய்யும் தவறுகள் இஸ்ரவேலர்களின் குறிப்பிட்ட இத்தவறை விடத்தான் கொடியதா? எனவே, சமூக நலன் கருதி சத்தியத்தை மறைக்க முடியும் என்பதைப் புரிய முடிகின்றது. இது விடயத்தில் நாம் மிகவும் “ஹிக்மத்”தாக நடந்து கொள்ள வேண்டும் என மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் விவாதிக்கின்றனர்.
மேற்படி வாதத்தைப் பல காரணங்களால் எம்மால் ஜீரணிக்க முடியாதுள்ளது. சத்தியப் பிரச்சாரம் செய்வோரைக் குழப்பவாதிகள் என சீல் குத்தி குட்டையைக் குழப்பிவருவோரும் “தஃவத்” பணிபுரி வதாகக் கூறிக்கொண்டு நன்மையை மட்டும் ஏவினால் போதும், தீமையைத் தடுக்கத்தேவையில்லை என்போரும் மேற்கூறிய வாதத்தைத் தமக்குரிய பலமான ஆதாரமாகக் கருதுவதால் இதுபற்றி சற்று விரிவாகவே நாம் அலச வேண்டியுள்ளது.
(1) ஹாரூன்(அலை) அவர்கள் பிரிவினை ஏற்பட்டுவிடும் என்ற அச்சத்தால் காளைக் கன்றை மக்கள் வணங்குவதை அறிந்த பின்னரும் கண்டும் காணாதது போல் இருந்துவிடவில்லை. அவர்கள் மக்களை இத்தீங்கிலிருந்து தடுக்கவே செய்தார்கள். இதனை அல்குர்ஆன் தெளிவாகவே கூறுகின்றது.
“இதற்கு முன்னதாகவே ஹாரூன்(அலை) அவர்களை நோக்கி என்னுடைய ஜனங்களே! இச்சிலையை வணங்கி நீங்கள் வழி தப்பி விட்டீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் அருளாளனாகும். என்னைப் பின்பற்றுங்கள். என்னுடைய கட்டளைக்கு வழிப்படுங்கள் என்று கூறினார்.” (20:90)
சிலை வணக்கத்தைத் தடுக்கும் அவர்களது இந்தப் பிரச்சாரம் எந்தளவுக்கு முற்றிப்போனதென்றால் சிலை வணங்கிகள் ஹாரூன்(அலை) அவர்களைக் கொலை செய்யக்கூட முற்பட்டனர். இதன்பிறகும் பிரச்சாரம் செய்வதென்றால் போராட்டத்தைச் சந்தித்தே அதைச் செய்ய வேண்டும் என்ற நிலை வந்தபோதே தம் பிரச்சாரத்தை (மனவிருப்பமில்லாமல்) நிறுத்திக் கொண்டார்கள். இதனைப் பின்வரும் வசனத்தின் மூலம் உணரலாம்.
“.. .. .. என் தாயின் மகனே! இந்த மக்கள் நிச்சயமாக என்னைப் பலவீனப்படுத்தி என்னைக் கொலை செய்துவிடவும் முற்பட்டனர். (ஆதலால் நான் ஒன்றும் செய்ய முடியாமலாகிவிட்டது. ஆகவே, என்னை அவமானப்படுத்தி) என்னுடைய விரோதிகள் சிரிக்குமாறு செய்துவிடாதீர். இந்த அக்கிரமக்கார மக்களுடன் என்னைச் சேர்த்து விடாதீர் என்று கூறினார். (7:150)
எனவே, எதிர்த்தரப்பாரின் ஹாரூன்(அலை) பிரிவினைக்குப் பயந்து தீமையைத் தடுக்காமல் இருந்தார்கள் என்ற வாதம் தவறானதாகும். கொலை விழும் என்றளவுக்கு நிலைமை முற்றிப் போனதன் பின்னர்தான் அவர் தமது பிரச்சாரத்தை நிறுத்திக் கொண்டார் என்றே அருள் மறை கூறுகின்றது.
காளை மாட்டுச் சிலை வணங்கப்படும் போது ஹாரூன் தடுக்காமல் இருந்து விட்டார் என்று எண்ணித்தான் மூஸா(அலை) அவர்கள் ஹாரூன்(அலை) அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்கின்றார்கள். (இதுவே தவறைக் கண்டும் காணாதது போல் இருக்க முடியாது என்பதை உணர்த்துகின்றது)
இதற்கு பதில் கூறும் போது தான் ஹாரூன்(அலை) தடுத்த விபரத்தைக் கூறி இந்த அக்கிரமக்கார மக்களுடன் என்னையும் சேர்த்து விடாதீர் என்றும் கூறினார். இதன் அர்த்தம் மூஸா(அலை) அவர்கள் ஹாரூனும் காளை மாட்டை வணங்கினார் எனக் கருதுவதால் அவர் அப்படிக் கூறினார் என்பதல்ல. தவறு நடக்கும் போது அதைக் கண்டும் காணாதது போல் இருந்தார் என மூஸா நபி கருதினால் ஹாரூன்(அலை) அவர்களும் அந்த அக்கிரமக் காரர்களில் ஒருவர் என்றாகி விடும். நான் தடுத்தேன். எனவே, நான் அவர்களில் ஒருவன் அல்ல என்றே ஹாரூன்(அலை) கூறுகின்றார். (இதுவும் தவறைத் தடுக்காமல் இருக்க முடியாது என்பதையே உணர்த்துகின்றது) ஹாரூன் பிளவைத் தவிர்க்க தவறைத் தடுக்காது இருந்தார் எனக் கூறும் சகோதரர்கள் குர்ஆனுக்கு மாற்றமாகப் பொய் கூறுவதுடன் ஹாரூன் நபியையும் அந்த அக்கிரமக் காரர்களில் ஒருவராக குற்றம் சாட்டுகின்றனர் என்பதை உணர வேண்டும்.
(2) அடுத்து ஹாரூன்(அலை) அவர்கள் தமது பிரச்சாரத்தை இந்த அளவோடு நிறுத்திக் கொண்டதற்குக் கூட நியாயமான வேறொரு காரணம் இருந்தது. ஹாரூன்(அலை) அவர்கள் விடுத்த அழைப்புக்கு அம்மக்கள்,
“மூஸா நம்மிடம் திரும்ப வரும்வரையில் இதன் ஆராதனையை நாங்கள் விடமாட்டோம் என்று கூறிவிட்டார்கள்” (20:91) என்று பதிலளித்தார்கள் என அருள் மறை கூறுகின்றது.
மூஸா(அலை) அவர்கள் வந்து “கூடாது” என்று கூறிவிட்டால் விட்டு விடுவோம் என அவர்கள் கூறுகின்றார்கள். இந்நிலையில் பெரிய போராட்டம் செய்து தவறைத் தடுக்கும் அவசியம் இருப்பதாக அவர்கள் கருதியிருக்க மாட்டார்கள். மூஸா(அலை) அவர்கள் வந்தால் பிரச்சினையை சுமூகமாகவே தீர்த்து விடலாம் என்றே அவர்கள் இம்மக்களின் மேற்படி பதிலைக் கேட்டதும் எண்ணியிருப்பார்கள்.
ஹாரூன்(அலை) அவர்கள் மூஸா(அலை) அவர்களின் வருகை வரையிலும் (தன்னாலான மட்டும் பிரச்சாரம் புரிந்துவிட்டு) சற்று ஓய்ந்திருந்தார்கள். நாம் யார் வருகையை எதிர்பார்த்து எமது பிரச்சாரத்தை முடங்கச் செய்வது? அன்றைய “அத்தகைய” சூழ்நிலையோடு எமது இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பேச முடியுமா?
(3) அடுத்ததாக ஹாரூன்(அலை) அவர்கள் தெரிவித்த அச்சம்கூட அல்லாஹ்வால் கண்டிக்கப்படுவேன் என்ற எண்ணத்தில் எழுந்ததல்ல. மூஸா(அலை) அவர்களால் கண்டிக்கப்படுவேன் என்ற அச்சமே அவர்களிடம் மேலோங்கிக் காணப்பட்டது. “இஸ்ராயீலின் சந்ததிகளுக் கிடையில் நீர் பிரிவினையை உண்டு பண்ணிவிட்டீர் என்று நீர் என்னைக் கடுகடுப்பீர் “என்று நான் பயந்தேன்.” (20:94) என்ற அவர்களது வார்த்தை இதனை நன்றாக உணர்த்துகின்றது. ஏன் அவர்கள் இவ்விதம் எண்ணினார்கள் என்றால் 12 கோத்திரங்களாகப் பிளவு பட்டிருந்த பனூ இஸ்ரவேலர்களை பெரும் சிரமப்பட்டு ஒன்று சேர்த்து மூஸா(அலை) அவர்கள் சிறிது கால தலைமைத்துவத்தை ஹாரூன்(அலை) அவர்களிடம் ஒப்படைத்து விட்டுச் செல்கிறார்கள். அந்தக் கொஞ்சக் காலத்துக்குள் பிரிவு ஏற்பட்டால் தனது தகுதியற்ற தலைமையால்தான் பிரிவு ஏற்பட்டது என்பது போலாகிவிடுமென்பதே அவர் அச்சம். அவர் சிரமப்பட்டு ஒன்று படுத்திய கூட்டத்தை இவர் உடைத்து விட்டது போல் ஆகிவிடக்கூடாது என்று ஹாரூன்(அலை) அவர்கள் பயந்தார்கள்.
ஹாரூன்(அலை) அவர்கள் பிரிவு ஏற்பட்டால் அல்லாஹ்வின் கண்டனத்தைப் பெற நேரிடும் என்றோ அல்லது இதனால் தான் தண்டிக்கப்படுவேன் என்றோ எண்ணவில்லை. அப்படி எண்ணியிருந்தால் அதனை ஆதாரமாகக் கொள்ளலாம். அதல்லாமல் மூஸா(அலை) அவர்களுக்கு ஹாரூன்(அலை) அவர்கள் அஞ்சியதை நாம் எப்படி ஆதாரமாகக் கொண்டு செயல்படமுடியும்?
(4) அடுத்து ஒரு உண்மையை நாம் நிதானமாக சிந்திக்க வேண்டும். சத்தியத்தை எடுத்துச் சொல்லும்போது அதனை ஒரு கூட்டம் ஏற்று இன்னொரு கூட்டம் எதிர்ப்பதால் ஏற்படும் பிரிவு தவிர்க்க முடியாதது. தண்டனையைப் பெற்றுத் தராதது. (இப்படி நாம் கூறுவது சத்தியத்தை எளிய நடையில் தெளிவுபடுத்தாமல் எடுத்தேன், கவிழ்த்தேன் என்றாற்போல் நடந்து கொள்ளலாம் என்ற கருத்திலல்ல) ஏனெனில் சத்தியவான், அசத்தியவான் என்ற பிரிவு தொன்று தொட்டு உள்ளதுதான். இது மனிதனால் ஏற்பட்ட பிரிவு அல்ல. நேர்வழி, வழிகேடு- நன்மை, தீமை என்ற பிரிவுகளை யார் ஏற்படுத்தினானோ, அவனே நல்லவர், தீயவர் என்ற பிரிவையும் ஏற்படுத்தியுள்ளான். இதற்கு அல்குர்ஆனில் “ஹிஸ்புல்லாஹ்” (அல்லாஹ்வின் கூட்டம்) (5:56, 58:22) “ஹிஸ்புஸ் ஷைத்தான்” (ஷைத்தானின் கூட்டம்) (58:19) என்ற பதங்கள் பிரயோகிக்கப் பட்டிருப்பதைத் தக்க சான்றாகக் கொள்ளலாம்.
எனவே, இந்தப் பிரிவு அல்லாஹ்வாலேயே ஏற்படுத்தப்பட்டது என்பதை நாம் அறியலாம். சத்தியம், எடுத்துச் சொல்லப்படும்போது ஒரு கூட்டம் ஏற்று, மற்றொரு கூட்டம் மறுப்பதால் ஏற்படும் பிரிவு தவிர்க்க முடியாதது இயற்கையானது. அதற்காக பிரச்சாரகன் தண்டிக்கப்பட மாட்டான். அப்படித் தண்டிக்கப்படுவ தென்றால் எல்லா நபிமார்களும் தண்டனைக்குரியவர்கள் என்றாகிவிடும் (அல்லாஹ் இப்படி எண்ணுவதிலிருந்து எம்மைக் காப்பானாக!) ஏனெனில் நபிமார்கள் செய்த பிரச்சாரத்தால் ஏற்பட்ட பிரிவுகள் யுத்தங்களாகக் கூட வெடித்ததுண்டு.
அடுத்ததாக இந்த வாதத்தை எடுத்து வைக்கும் எமது நண்பர்களும் கூட இன்றைய இஸ்லாமிய உம்மத் பல கூறாகப் பிரிந்திருப்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ஏற்பட்டுள்ள இந்தப் பிரிவுகளுக்குக்கூட மார்க்கம் தெளிவாக எடுத்து வைக்கப்படாமையே அடிப்படைக் காரணமாகும். உண்மையைச் சொன்னால் பிரிவு, பிரச்சினை ஏற்படும் என அஞ்சி ஊமையாய்ப் போனவர்கள் அனைவரும் அணிதிரண்டு உண்மையை உரக்கச் சொல்லியிருந்தால் பல பிரிவுகளைத் தவிர்த்திருக்கலாம். சத்தியத்தை எடுத்துச் சொல்வதே ஒற்றுமைக்கு வழிவகுக்கும். சத்திய அழைப்புத்தான் ஒற்றுமைக்கான அழைப்பாகும் என்பதை அனைவரும் உணர்ந்து சத்தியத்தை மறைப்பதே பிரிவினைக்கு வழி வகுக்கும் என்பதைப் புரிந்து செயல்பட்டால் எத்தனையோ மார்க்கப்பிரச்சினைகளுக்கு இலகுவாகத் தீர்வு கண்டிருக்கலாமல்லவா?
இறுதியாக முக்கியமானதொரு விடயத்தை நமது சகோதரர்களின் மேலான கவனத்திற்கு விட விரும்புகின்றேன்.
(5) அல்லாஹுத்தஆலா அல்குர்ஆனிலே நபிமார்கள் மூலம் நிகழ்ந்த பல தவறுகளை எடுத்துக்கூறுவதைக் காணலாம். ஆதம்(அலை) தடுக்கப்பட்ட கனியைப் புசித்துவிட்டு “தவ்பாச்” செய்ததையும், யூனுஸ்(அலை) அவர்கள் மீனின் வயிற்றில் இருக்கும்போது தான் செய்த தவறுக்காக “தவ்பாச்” செய்ததையும் இதற்குச் சிறந்த உதாரணங்களாகக் கூறலாம்.
மேற்கூறிய சம்பவங்களைப் போன்றே தற்போது விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சம்பவத்தின் பின்னரும் மூஸா(அலை) அவர்கள் தனக்காகவும் ஹாரூன்(அலை) அவர்களுக்காகவும் பாவமன்னிப்புச் செய்தார்கள் என்ற விபரத்தைப் பின்வரும் வசனம் மூலம் அறிய முடிகின்றது.
“என் இறைவனே! என்னையும், என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில் நீயே கிருபையாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாளன் என்று (பிரார்த்தித்துக் கூறினார்)” (7:151)
நடந்துவிட்ட ஒரு தவறுக்காக அதைச் செய்தவர்களே “தவ்பாச்” செய்ததன் பின்னர் அதனை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் எவ்வளவுதான் ஆழமானதாக, சமூக நலனுக்கு நல்லதாக எமக்குப் புலப்பட்டாலும் அவைகள் அர்த்தமற்றவைகளே!
நூஹ்(அலை) அவர்கள் தன் மகனுக்காகப் பிரார்த்தித்தார்களே என்று ஒரு முஸ்லிம் தனது காபிரான மகனுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க முடியுமா? அல்லது யூனுஸ் நபிபோல் செயல்படத்தான் முடியுமா? ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைளை மீறியதைப்போல் நாமும் மீற முடியுமா? மேற்கூறப்பட்ட சம்பவங்கள் விடயத்தில் எப்போக்கை நாம் கைக் கொள்வோமோ அதே போக்கைத்தான் மன்னிப்புக் கேட்கப்பட்ட ஹாரூன்(அலை) அவர்களின் மேற்படி சம்பவத்திலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை உணரும்போது தாம் தவறாக விளங்கியுள்ள ஹிக்மத்துக்குத் துணையாக மேற்படி சம்பவத்தை இழுத்துக் கொண்டு வருவது தவறானது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெளிவாகின்றது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..
Tuesday, April 12, 2016
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-2)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
அபிப்பிராய பேதத்தின் ஆரம்பம்இலங்கைத் திரு நாட்டிலும் உலகின் பல பாகங்களிலும் பல்வேறுபட்ட இஸ்லாமிய அமைப்புக்கள் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து அவைகள் பிரச்சாரம் புரிவதற்கு தஃவாவிற்காக ஒவ்வொரு குழுவும் தேர்ந்தெடுத்திருக்கும் அணுகுமுறைகள் தான் முக்கிய காரணியாய்த் திகழ்கின்றன. எதைப்பற்றி மக்களுக்கு போதிக்க வேண்டும்? எதற்கு எந்தளவில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்? என்ற வினாவிற்குப் பலரும் பல விதத்தில் பதிலளிக்கின்றனர்.
இன்றைய இஸ்லாமிய “உம்மத்” அதன் அடிப்படைக் கடமையான தொழுகையைப் புறக்கணித்து வழிகேட்டில் சென்று கொண்டிருக்கின்றது. எனவே, தொழுகைக்காக அழைப்பது அவசியமானதாகும். இதனடிப்படையில் தஃவத் என்றாலே தொழுகைக்காக அழைப்பதுதான் என்றாற் போல்; சில சகோதரர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
சரியானதொரு இஸ்லாமிய சமூக அமைப்பைத் தோற்றுவிக்காமல் நாம் எவ்வளவுதான் பிரச்சாரம் புரிந்தாலும் ஜாஹிலிய்யத்தான சமூக முறையைப் பின்பற்றி வரும் மக்களுக்கு அது எத்தகைய பிரயோசனத்தையும் அளிக்கப் போவதில்லை. எனவே, இஸ்லாமிய சமூக அமைப்பொன்றைத் தோற்றுவிப்பதற்கான அழைப்பே தற்போது அவசியமானதாகும் எனக் கருதுவோர் சிலர்.
என்னதான் பெரிதாகப் போதனை செய்தாலும் அதிகாரம் இல்லாவிட்டால் அதன் பயனைப் பூரணமாகப் பெறமுடியாது போய்விடும். எனவே, இஸ்லாமிய ஆட்சி ஒன்றை நிறுவுவது அவசியமானது. ஆட்சி அமையப் பெற்றுவிட்டால் ஆயிரம் பயான்காளால் செய்ய முடியாததைக் கூட ஒரு கட்டளை மூலமாகச் செய்து விடலாம். எனவே, ஆட்சியை இலக்காகக் கொண்டதாகவே எமது தஃவா அமைய வேண்டும். அந்த இலக்கை நோக்கி நகரும் போது இடையில் குறுக்கிடும் சில விடயங்களை நாம் அலட்டிக்கொள்ளக் கூடாது. எமது இலக்கு விரிவானது. அதனை அடையக்கூடியதாகவே எமது தஃவா அமைய வேண்டும் எனச் சில சகோதரர்கள் எண்ணுகின்றனர்.
என்னதான் ஒருவன் பெரிய “இபாதத்” செய்தாலும் அவன் “ஷிர்க்” செய்து விட்டால் அவனது வணக்கங்கள் அனைத்தும் அழிந்து விடுகின்றன. அதே போன்று வணக்க வழிபாடுகளில் “பித்அத்” எனும் புதியன புகுந்திருந்தால் அல்லாஹ்வால் அவைகள் ஏற்கப்படமாட்டா. எனவே, ஷிர்க் பித்அத் பற்றி எச்சரிக்கை செய்வதே அவசியமானதாகும் எனக் கருதுகின்றனர் சிலர்.
மேலே நாம் கூறிய அத்தனையும் தஃவாவின் முக்கிய அங்கங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. அதே வேளை யானை பார்த்த குருடர் போல் இதுதான் “தஃவா” வெனக் கூறி “தஃவத்”தின் வட்டத்தைச் சுருக்கிவிடவும் கூடாது.
மார்க்கத்தை மறைக்கலாமா?
இதே வேளை “தஃவா”வில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வெண்டும் என்பதில் அபிப்பிராயப் பேதப்பட்டிருக்கும் சகோதர அமைப்புக்களுக்கிடையே சில விடயங்களை மக்கள் மன்றத்தில் வைக்க வேண்டுமா இல்லையா என்பதிலும் கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
மார்க்கத்தில் (ஏற்கனவே சொல்லப்பட்ட) சில விடயங்களை மக்கள் மன்றத்தில் வைத்தால் மக்கள் குழப்பமுறுவர். எனவே அந்த சில விடயங்களை நாமும் செய்யாமல் பிறருக்கும் சொல்லாமல், பிறர் அவை பற்றி கேட்டால் கூட அவை பற்றி விபரிக்காமல் விட்டு விட வேண்டும். இதுவும் அல்குர்ஆன் கூறும் “தஃவா” அமைப்பே எனச்சில சகோதரர்கள் கருதுகின்றனர்.
“நேர்வழியையும் தெளிவான அத்தாட்சிகளையும் நாம் அருளி அவற்றை மனிதர்களுக்காக வேதத்தில் தெளிவுபடுத்திக் கூறிய பின்னும், எவர்கள் (அவற்றை) மறைக்கின்றார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ்வும் சபிக்கிறான். (மற்றும்) சபிப்போரும் அவர்களை சபிக்கின்றனர்”. (2:159)
அல்லாஹ்வே வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் அவற்றில் சிலதை மறைத்துத்தான் “தஃவா” செய்ய வேண்டு மென்பது கண்டனத்துக்குரிய ஒன்று என்பதை மேற்படி வசனம் தெளிவு படுத்துகின்றது. அல்லாஹ் எம்மைவிட எதைச் சொல்ல வேண்டும்? எதைச் சொல்லக் கூடாது என்பதை அறிந்தவனல்லவா? அல்லாஹ்வின் கட்டளை களை மக்களுக்கு எடுத்துச் சொல்பவனே அழைப் பாளனாவான். அதை விட்டு விட்டு அல்லாஹ் கூறியவற்றில் சிலதை மக்களுக்குச் சொல்ல முடியாது என “சென்ஸார்” (தணிக்கை) செய்யும் மேலதிகாரியல்லவே அவன்.
மக்கள் குழப்பமுறுவர் என்பதைக் காரணம் காட்டி சத்தியத்தை மூடி மறைப்பது அர்த்தமற்றதாகும். இதைச் சொன்னால் இவர்கள் ஏற்பார்கள்; இதைச் சொன்னால் இவர்கள் ஏற்க மாட்டார்கள் என நாமாக முடிவு செய்வது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகும். இதனை அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரழி) அவர்கள் சம்பந்தப்பட்ட அவர் பரிசுத்தவானாக ஆகிவிடக் கூடும் என்பதை உமக்கு எது அறிவித்தது” எனக் கூறும் அல்குர்ஆனின் எண்பதாவது அத்தியாயம் மிகத் தெளிவாக உணர்த்துகின்றது.
இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் கட்டாயமே நமக்கு உண்டு, அதனை ஏற்பதற்குரிய மனோபக்குவத்தை அல்லாஹ் தான் கொடுக்க வேண்டுமேயல்லாமல் நாமாக முயன்று அதைச் செய்து விட முடியாது. இதற்கான பல சான்றுகளை அல்குர்ஆனில் காணலாம். நாம் சொல்லும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டால் இருவகையான கூலிகள் கிடைக்கும். அது மறுக்கப்பட்டால் நமது கடமை நீங்கிவிடும். சத்தியத்தை மறுப்போர் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. உண்மை தெளிவாக இருக்கும் போது அதிலிருந்து தடம் புறழ்வோர் பற்றி இஸ்லாம் பின்வருமாறு கூறுகின்றது.
“இதை (அல்லாஹ் கூறுகின்ற உதாரணத்தை) கொண்டு அவன் அநேகரை வழி கெடும்படி செய்கின்றான். அநேகரை நேர்வழி பெறும் படியும் செய்கின்றான். (ஆனால் இவ்வேதத்தை மனமுரண்டாக நிராகரிக்கும்) பாவிகளைத்தவிர (மற்றவர்) இதைக் கொண்டு வழிகெடும்படி அவன் செய்ய மாட்டான்.” (2:26)
“உங்களை இரவும் பகலைப் போன்ற வெள்ளை வெளேர் என்கின்ற தெளிந்த நிலையில் விட்டுச் செல்கின்றேன். தெளிவான இம்மார்க்கத்திலிருந்து எனக்குப் பின்னர் அழிந்து நாசமாகுபவனைத் தவிர வேறு எவனும் வழி கெட மாட்டான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு மாஜா)
சத்தியத்தைச் சொல்லும் போது பாவிகளும், அழிந்து நாசமாகக் கூடியோரும், உள்ளங்களுக்கு முத்திரை குத்தப்பட்டோரும் மறுக்கவே செய்வர். இவர்கள் மறுப்பார்களே என்பதற்காக சத்தியத்தை ஏற்கும் மனோபக்குவம் பெற்ற விசுவாசிகளிடம் கூட உண்மை சென்றுவிடா வண்ணம் மூடி மறைப்பதும், முலாம் பூசுவதும் பெரும் அநியாயமும் அறியாமையுமாகும். இவ்வறி யாமையை நீக்குவான் வேண்டி, இவ்வகையான எண்ணத்திற்கு அடிப்படைக்காரணமாய் அமைந்த மாற்றுக் கருத்துடைய நண்பர்கள் தமக்குச் சான்றாக எடுத்து வைக்கும் அல்குர்ஆன் வசனங்களின் உண்மைப் பொருள் யாது என்பது பற்றி விரிவாக ஆராய்வோம்.
Monday, April 11, 2016
அழைப்புப் பணியின் அவசியம் (தொடர்-1)
எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
மனிதன் இயல்பிலேயே தவறு செய்யக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். பெரும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் நபிமார்கள் மட்டுமே! எனவே, தவறு செய்யும் இயல்புடைய மனிதனுக்கு நன்மையை ஏவுவதும், தீமை குறித்து எச்சரிக்கை செய்வதும் அவசியமாகும்.
நாலுபேர் எடுத்துச் சொன்னால் தனது நடத்தைகளையும், செயற்பாடுகளையும் மாற்றிக் கொள்ளும், அல்லது அதுகுறித்து நடுநிலையோடு சிந்திக்கும் மனோ நிலையுடனேயே மனிதன் படைக்கப்பட்டுள்ளான். “இதைச் செய்யுங்கள்” அல்லது “அதைச் செய்யாதீர்கள்” என பலரால் அல்லது பலவிடுத்தம் வேண்டப்பட்டால் அதற்கு இணங்கி நடக்க, தீயவன்கூட முற்படலாம். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது பழமொழியாகும். மனிதனது இந்த மனோ இயல்பைப் பயன்படுத்தி அவனிடம் எழுச்சி பெறும் தீய உணர்வுகளை அழிக்கவும், அடக்கவும் மங்கி மறைந்து செல்லும் நல்லனவற்றை துலக்கி மெருகூட்டவும் அழைப்புப்பணி அவசியமாகின்றது.
மனிதர்களிலேயே சிலர் இருக்கின்றனர். அவர்கள் மற்றவர்கள் மனதில் தீய சிந்தனைகளை விதைப்பதையே வினையாகக் கொண்டவர்கள். அத்தகையவர்கள் உலோபித்தனம் செய்வார்கள்; (மற்ற) மனிதர்களை உலோபித்தனம் செய்யும்படியும் தூண்டுவார்கள். அல்லாஹ் தன் பேரருளிலிருந்து தங்களுக்குக் கொடுத்ததை (பிறருக்குக் கொடுக்காமல்) மறைத்தும் கொள்வார்கள் அத்தகைய காபிர்களுக்கு இழிவுதரும் வேதைனையை நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (4:37) (பார்க்க 57:24) என்று கூறுகிறான்.
“அல்லாஹ்வின் பாதையைவிட்டும் மக்களைத் தடுக்கின்றான்” (4:167, 9:9, 47: 32)
இம்மறை வசனங்கள் தீமையை ஏவி நன்மையைத் தடுக்கும் சில மனிதர்களும் மக்கள் மத்தியில் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாறே “முனாபிக்”கான ஆண்களும் பெண்களும் நன்மையைத் தடுப்பதிலும், தீமையை ஏவுவதிலும் ஒருவர் மற்றவருக்குத் துணையாக இருப்பதாக” அல்குர்ஆன் கூறுகின்றது. (9:67)
தீமையை ஏவி நன்மையத் தடுக்கும் இச்சூழலில் தஃவாவின் அவசியம் அத்தியவசியமாகின்றது.
மக்கள் நன்மைகளை விட்டும் வெகுவேகமாக வெருண்டோடிக் கொண்டிருக்கின்றனர். தீமைகளில் கிடைக்கும் அற்பசுகம், உலகாதாயம் என்பவற்றால் கவரப்பட்டு விளக்கை நோக்கிச் செல்லும் விட்டில்களாக தீமைகளை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.
இதேவேளை ஷைய்த்தானின் தோழர்கள் நரகத்தின் வாயில்களில் நின்று கொண்டு அதன்பால் மக்களை அழைக்கும் பிரச்சாரத்தை மூலை முடுக்கெல்லாம் முடுக்கிவிட்டுள்ளனர்.
வட்டி ஹராம் என்பது இஸ்லாமிய பொருளாதாரக் கோட்பாட்டின் அடிப்படையாகும். இந்த வட்டியின் பக்கம் வாருங்கள் என தொலைக்காட்சி, வானொலி போன்ற தொலைத் தொடர்பு சாதனங்கள் அழைப்புவிடுக்கின்றன. பத்திரிகையில் பக்கம் பக்கமாக விளம்பரங்கள், இனிப்பான திட்டங்கள் அன்றாடம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு தீமைக்காக தஃவா நடக்கின்றது. இஸ்லாமிய இரத்தங்கள் பலவும் வட்டியால் வார்த்தெடுக்கப்பட்டுள்ளன.
சூதாட்டம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட ஷைய்த்தானின் செயல்களில் ஒன்றாகும். அதிஷ்டலாபச் சீட்டு லொத்தர்கள் என்ற பெயரில் நிமிடத்துக்கு நிமிடம் வானொலி தொலைக்காட்சிகளில் இதற்காக தஃவத் நடக்கிறது. பத்திரிகைகளில் பரபரப்பான விளம்பரங்கள், வீதிகள் தோறும் ஒலிபெருக்கி வைத்து இதற்காக தஃவா செய்யப்படுகிறது. இந்த ஷைய்த்தானிய அழைப்பு வீட்டுக் கதவுகளைக்கூட தட்டத் தவறவில்லை. இலங்கையில் அதிகமாக இந்தச் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களாக எமது சமூகத்தினர் காணப்படுகின்றனர்.
மது, பாவங்களின் தலைவாயிலாகும். இந்த மது பானத்திற்கான அழைப்பும் பரவலாக நடைபெறுகின்றது. இதற்காக பத்திரிகைகளில் அரைப்பக்க முழுப்பக்க கலர் விளம்பரங்கள் என்ற பெயரில் தஃவா நடைபெறுகின்றது. இவ்வாறே புகைத்தலின் பக்கம் அழைப்பதற்கும் நவீன பிரச்சார யுக்திகள் கையாளப்படுகின்றன.
ஆபாசத்தையும், வன்முறையையும், கவர்ச்சியையும் சதையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்ட இன்றைய சினிமாக்கள் சமூகத்தை சீரழித்து வருகின்றன. பத்திரிகை, தொலைத் தொடர்பு சாதனங்கள், பாதையோர சுவர்கள் அனைத்திலும் இன்றைய இளம் தலை முறையினரை இந்த இழிவின் பக்கம் இழுத்தெடுப்பதற்கான கவர்ச்சியான ஆபாசமான அழைப்பு(தஃவா) நடந்து கொண்டிருக்கின்றது.
வீண் கேளிக்கைகள், ஆடல் பாடல், இசைக் கச்சேரிகள், ஆண் பெண் கலப்பு நிகழ்ச்சிகள் என்பவற்றின் மூலம் எல்லா வகையான தீமைகளின் பக்கமும் மக்களைக் கவர்ந்திழுக்க கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவளிக்கப்படுகின்றன, இதற்காக சகல விதத்திலும் தொடர் பூடகங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவ்வளவு பரவலாக தீமைக்கு ஆதரவான குரல் பலத்து ஒலிக்கும் போது நன்மையின் பால் அழைக்கும் குரல் மட்டும் பலமிழந்து போய் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தீமையின் பக்கம் மக்கள் இழுபட்டுச் செல்லும் வேகத்தையும், அதற்காக செய்யப்படும் முயற்சிகளையும் பார்க்கும் போது நன்மையின்பால் அழைத்து தீமைக்கு எதிராகக் குரல் கொடுப்பது எவ்வளவு அவசியமானது என்பதை விளங்கமுடிகின்றது.
தவறைத் தடுக்காதிருக்கலாமா?
மேலே குறிப்பிடப்பட்டது போன்று தீமைகள் புயலாய் வீசும் போது உண்மையான இறைவிசுவாசி தானுண்டு தன்பாடுண்டு என்று இருக்கமுடியுமா? அவனது உடன்பிறப்புக்கள், உற்றார் உறவினர்கள், ஊரார், மற்றார்கள் அனைவரும் அழிவின் பக்கம் விரைந்து சென்று கொண்டிருக்கும் போது இவன் வெறுமனே பள்ளியில் முடங்கிக் கிடக்கலாமா? ஒரு நாளும் இருக்கமுடியாது. இதனைப் பின்வரும் சம்பவங்கள் எமக்கு உணர்த்துகின்றன.
சுலைமான்(அலை) அவர்கள் தன் பட்டாளத்துடன் போகும் போது ஒரு எறும்பு தனது மற்ற எறும்புக் கூட்டங்களைப் பார்த்து “எறும்புகளே! நீஙகள் உங்கள் புதருக்குள் புகுந்து கொள்ளுங்கள்; சுலைமானும் அவருடைய படையினரும் தாம் அறியாமலேயே உங்களைத் திண்ணமாக மிதித்து விட வேண்டாம்” எனக்கூறியது. (பார்க்க 27: 17-18)
இந்த சம்பவம் மூலம் ஓர் எறும்பு தனது மற்றைய எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டியிருக்கும் அக்கறையை உணரமுடிகின்றது. ஓர் எறும்பே சமூக உணர்வுடன் நடந்திருக்கும் போது எமது சகோதரர்கள் அறியாமையால், ஷிர்க்கிலும் பித்அத்துக்களிலும் ஹராம்களிலும் மூழ்கியிருக்கும் போது மது, போதை, சினிமா, புகைத்தல், வட்டி, சூது என தம்மைத்தாமே அழித்துக் கொள்ளும் காரியங்களில் ஈடுபடும் போது நாம் அவற்றைத் தடுக்காது இருக்கலாமா? அப்படி இருந்தால் இந்த எறும்பைவிட கீழான நிலைக்கல்லவா சென்றுவிடுவோம்.
இதே அத்தியாயம் மற்றுமொரு நிகழ்ச்சியைக் கூறுகின்றது. சுலைமான்(அலை)அவர்கள் தனது படையைப் பார்வையிட்டுக் கொண்டு வருகின்றார்கள். அங்கே “ஹுத்ஹுத்” என்ற பறவையைக் காணவில்லை. இந்தப் பறவை தாமதித்து வந்து அதற்குரிய காரணத்தைக் கூறாவிட்டால் அதை அறுத்துவிடுவேன்; அல்லது கடுமையாகத் தண்டிப்பேன் என்று போபத்தோடு கூறுகிறார்கள். அப்போது அந்தப் பறவை வந்து சுலைமான் நபியிடம் பின்வருமாறு கூறுகின்றது.
நீங்கள் அறியாத ஒரு செய்தியை நான் அறிந்து வந்துள்ளேன். ஸபாவில் இருந்து உறுதியான ஒரு செய்தியை உங்களிடம் கொண்டுவந்துள்ளேன். அவர்களை ஒரு பெண் ஆட்சி செய்கிறாள். அந்த நாட்டில் சகல வளங்களும் காணப்படுகின்றன. மகத்தானதொரு சிம்மாசனமும் அவளுக்குண்டு. அவளும் அவளது சமூகமும் அல்லாஹ்வை வணங்காது சூரியனை வணங்குகின்றனர். ஷெய்த்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அழகாக்கி அவர்களை நேர்வழியைவிட்டு தடுத்துவிட்டான். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க வேண்டாமா? என்று கூறியது. (பார்க்க 27: 20-26)
இந்தச் செய்தியைக் கேட்ட பின் அந்தப் பெண்ணுக்கு சுலைமான் நபி தஃவா செய்து, அவள் இஸ்லாத்தில் இணைந்ததை அல்குர்ஆன் தொடந்து கூறுகின்றது.
ஒரு நாட்டு மக்கள் சூரியனை வணங்குவதைக் கண்டு ஒரு பறவை கவலை கொண்டுள்ளது. எமது சகோதரர்களில் பலர் அறியாமல் கப்று வழிபாட்டிலும் ஷிர்க்கான சடங்குளிலும் மூழ்கியுளளனர். இவற்றால் தாம் செய்கின்ற நல்லமல்களை அழித்து கொள்வதுடன், தம்மைத்தாமே நரகிற்குத் தயார்படுத்திக் கொண்டுமிருக்கின்றனர்.
இதனைக் கண்டு எமக்கு சிறிதளவாவது கவலை வரவில்லையென்றால் நாம் இந்தப் பறவையை விடக் கீழானவர்களாகவல்லவா இருப்போம். சாதாரணமாக ஒருவன் தனது அரசியல் தலைவன் அவமதிக்கப்படுவதை தாங்கிக்கொள்வதில்லை. தனது தலைவர் போட்ட கடையடைப்பை யாராவது மீறினால் இவன் சீறுகிறான், தாக்குகிறான் சாதாரண தலைவனையே இப்படி ஒருவன் வெறி கொண்டு மதிக்கும் போது ஷிர்க் செய்வதன் மூலம் அல்லாஹவுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் கட்டளைகள் பகிரங்கமாக மீறப்படுகின்றன. அப்போது அவன் சீறாமல் சிணுங்காமல் சின்னதொரு எதிர்ப்பையும் காட்டாது குறைந்தபட்சம் முகச் சுளிப்பையாவது காட்டாது கல்லுப்போல் நிற்கிறானெனில் இவனது இறை விசுவாசத்திற்கு அது ஒரு களங்கமாகிறது.
ஈமானுக்கு சிறப்பு:
அல்லாஹ்வை முஸ்லிம்களாகிய நாம் ஈமான் கொண்டுள்ளோம். நாம் சத்தியப் போதனையில் ஈடுபடும் போதுதான் எமது ஈமான் சிறப்புப்பெறுகின்றது. இந்த தஃவத் எனும் பணியால்தான் நாம் ஏனைய சமூகங்களை விட சிறப்புப் பெற்றிருக்கின்றோம். இதனை,
“மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதா யத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். ஏனெனில், நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள், தீயதைவிட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின் மீது திடமாக நம்பிக்கை கொள்கிறீர்கள்…” (3: 110)
என்ற மேற்படி வசனத்தை நோக்கும் போது ஏலவே நாம் குறிப்பிட்டதை உணரலாம்.
பற்று:
அடுத்து ஒருவன் ஒரு கொள்கையில் எவ்வளவு தூரம் நம்பிக்கை வைத்தவன் என்பதை அந்தக் கொள்கைக்காக அவன் செய்யும் தியாகம், அது வாழ அவன் எடுக்கும் முயற்சி என்பவற்றின் மூலமே நாம் உணரமுடியும். அல்லாஹ்வை நான் ஈமான் கொண்டுள்ளேன். இஸ்லாத்தை என் வாழ்க்கைத் திட்டமாகவும், இறைதூதரை என் தலைவராகவும், வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன். நான் இந்த அடிப்படையில் வாழ்வேன் மற்றவர்கள் இப்படி வாழ்வதற்காக எந்த முயற்சியையும் நான் எடுக்கமாட்டேன். அதேவேளை நான் ஏற்ற கொள்கைக்கு எதிராக எவராவது செயல்பட்டால் எனக்கு எரிச்சலோ கோபமோ வராது. அதைத்தடுப்பதற்கு முற்படமாட்டேன் என்ற நிலையில் ஒருவர் வாழ்ந்தால் அவர் கொள்கைப் பற்றுடையவர் என்று எவரும் கூற மாட்டர். உண்மையும் அதுதான்.
இவ்வகையில் இஸ்லாத்தை இதயத்தில் ஏற்று அதைப்பிறருக்கும் எடுத்துச் செல்லும் போதுதான் ஒருவன் இஸ்லாம் என்ற கொள்கையில் பற்றுடையவனாக இருக்க முடியும். எனவே, இறைவன் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் தராதரத்தை மதிப்பிடும் சாதனமாக இந்த அழைப்புப்பணி அமைந்துள்ளது எனலாம்.
வாழ்க்கையின் வெற்றி:
மனித வாழ்வின் வெற்றியே இதில் தங்கியிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
“நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக் கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)” என்ற சூறா அல் அஸ்ரின் கூற்றை நோக்கும் போது அழைப்புப்பணி என்பது ஒரு இஸ்லாமியனின் இலட்சியத்துடன் இரண்டறக் கலந்ததாக இருக்க வேண்டும் என்பதை விளங்கலாம்.
மனித வாழ்வின் வெற்றியே இதில் தங்கியிருப்பதாக அல்குர்ஆன் கூறுகின்றது.
“நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான். ஆயினும் எவர்கள் ஈமான் கொண்டு (நல்ல) அமல்கள் செய்து சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக் கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)” என்ற சூறா அல் அஸ்ரின் கூற்றை நோக்கும் போது அழைப்புப்பணி என்பது ஒரு இஸ்லாமியனின் இலட்சியத்துடன் இரண்டறக் கலந்ததாக இருக்க வேண்டும் என்பதை விளங்கலாம்.
முஸ்லிம் என்பதன் சிறப்பு:
முஸ்லிம் என நம்மை நாம் அறிமுகம் செய்து கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம். இந்த முஸ்லிம் என்ற பெயர் அழகைப் பெறவேண்டுமானால் நாமும் நல்லமல் செய்வதுடன் பிறரையும் அதன்பால் அழைத்துக் கொண்டு நம்மை நாம் ஒரு முஸ்லிமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். வெறுமனே முஸ்லிம் எனக் கூறிக்கொள்வதில் அழகோ சிறப்போ இல்லை என்பதை பின்வரும் வசனம் உணர்த்துகின்றது.
“அல்லாஹ்வின்பால் (மக்களை) அழைத்து, (தானும்) நற்செயல்செய்து; நிச்சயமாக நான் முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறுபவனை விட சொல்லால் மிக அழகானவன் யார்?” (41:33)
இதிலிருந்து நான் முஸ்லிம் எனக்கூறும் நமது வார்த்தை அழகு பெறவேண்டுமென்றால் தஃவாப் பணியில் நாம் ஈடுபடுதல் வேண்டும் என்பதை உணரலாம்.
மார்க்கக் கடமை:
தஃவாப் பணிபுரிவது “பர்ழுஅய்ன்” அனைவரும் அவசியம் செய்தேயாக வேண்டிய கடமையாகும். இப்பணியைச் செய்யாதபோது குற்றவாளியாக நேரிடும் என்ற கருத்தை சில அறிஞர்கள் கூறுகின்றனர். மற்றும் சிலரோ “இல்லை இது “பர்ழுகிபாயா”, சிலர் செய்துவிட்டால் மற்றவர்கள் மீதுள்ள கடமை நீங்கிவிடும். அவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்” என்பர்.
தஃவாப் பணியைப் பொறுத்த வரையில் சில போது பர்ழுஅய்னாக உள்ளது. சிலபோது பர்ழுகிபாயாவாக மாறலாம். உதாரணமாக, ஒரு சபையில் மார்க்க முரணான செயல் நடை பெறுகிறது. ஒருவர் அதனைத் தடுக்கின்றார் அத்தோடு அந்தத் தவறு கைவிடப்படுகின்றது. இந்த வேளையில் அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்தத் தவறைக் கண்டிக்க வேண்டியதில்லை. இப்போது ஒருவர் செய்தால் மற்றவர்கள் மீதுள்ள பொறுப்பு நீங்கிவிட்டது எனலாம்.
மேற்குறித்த அதே சந்தர்ப்பத்தில் ஒருவர் கூறியபின்னரும் அத்தவறு நடைபெறுகின்றதென்றால் அங்கிருக்கக்கூடிய மற்றவர்களும் இவருக்குத் துணையாக தமது அதிருப்தியை வெளிக்காட்டக் கடமைப்படுவர். இப்போது தஃவா பர்ழு அய்னாக மாறும் எனக்கூறலாம்.
எது எப்படியிருப்பினும் தஃவத் பணி பர்ழு-கட்டாயமானது என்பதில் கருத்து வேறுபாடில்லை. நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றும் அனைவரும் இப்பணியைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை சூறா யூசுப்பின் 108-வது வசனம் கூறுகின்றது.
தண்டனைக்கு ஆளாக நேரிடும்:
தவறைத் தடுக்கத் தவறும் போது அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் அந்தத் தண்டனை தீயவர்களை மட்டுமன்றி நல்லவர்களையும் பீடித்துக் கொள்ளும். இதனை,
“உங்களில் அநியாயக்காரர்களுக்கு மட்டுமே ஏற்படாது (அனைவருக்கும் சேர்த்து ஏற்படுகின்ற) தண்டனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்” (8:25) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.
ஒரு தவறு பகிரங்கமாக நடந்து அதனைத் தடுப்பதற்கான ஆற்றல் இருந்தும் தடுக்கப்படவில்லையானால் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்பதை பல நபி மொழிகள் உணர்த்துகின்றன.
எப்படிச் செய்வது?
அழைப்புப்பணி புனிதமானதுதான். அதற்கு ஈடுஇணையற்ற நற்கூலியுள்ளது. ஆயினும் அனைவரும் இப்பணியை ஆற்றமுடியுமா? எல்லோருக்கும் மேடையில் ஏறி நின்று பயான் பண்ண முடியுமா? இது சாத்தியம்தானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவது இயல்பு.
தஃவத் என்றதும் குத்பா ஓதவேண்டும்; பயான் செய்யவேண்டும் என்று கருதுவதே இதற்குக் காரண மாகும். தஃவாவில் மேற்குறித்தவை அடங்கினாலும் அவை மட்டும்தான் தஃவத் என்பதற்கில்லை.
தான் அறிந்த மார்க்கச் செய்தியை பிறருக்கு எடுத்துக் கூறுவதே தஃவத்தாகும். இதற்காக முழுமையாக மார்க்கத்தை அறிந்து தெளிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் சொல்லும் விடயத்தில் மட்டும் தெளிவு இருந்தாலும் போதுமானதாகும். இதை உணராத பலர் அழைப்புப்பணி ஆலிம்களின் கடமை என நினைக்கின்றனர்.
ஆலிம்களைவிட அதிகமாக தனிநபர் தஃவாவை செய்யும் வாய்ப்பை பொதுமக்கள் பெற்றுள்ளனர். பள்ளிக்கூட தோழர்கள், நண்பர்கள், காரியாலத்தில் சேர்ந்து பணியாற்றுகின்ற அனைவரிடமும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்துச் செல்லலாம். இதனைச் செய்வதற்கு முன்கூட்டியே தலைப்புத் தெரிவு செய்து திட்டமிட்டு உரையாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.
ஆலிம்களைவிட அதிகமாக தனிநபர் தஃவாவை செய்யும் வாய்ப்பை பொதுமக்கள் பெற்றுள்ளனர். பள்ளிக்கூட தோழர்கள், நண்பர்கள், காரியாலத்தில் சேர்ந்து பணியாற்றுகின்ற அனைவரிடமும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்துச் செல்லலாம். இதனைச் செய்வதற்கு முன்கூட்டியே தலைப்புத் தெரிவு செய்து திட்டமிட்டு உரையாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை.
பேச்சோடு பேச்சாக, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்ல கருத்துக்களை முன்வைக்க முடியும். அவரிடம் காணப்படும் தவறான கருத்துக்களைக் களைய முடியும் இதற்கு யூசுப்(அலை) அவர்களது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறமுடியும்.
நபி யூசுப்(அலை) அவர்கள் சிறையில் நீண்டகாலம் இருந்தார்கள். அவர்களுடன் இன்னும் இருவர் அச்சிறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட கனவுகளுக்குரிய விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக யூசுப் நபியிடம் வந்து தாம் கண்ட கனவுகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். யூசுப்(அலை) அவர்கள் விளக்கம் கூறுவதற்கு முன்னரே பல தெய்வங்களை வழிபடுவது சிறந்ததா? அல்லது அனைத்தையும் அடக்கியாளும் அல்லாஹ் சிறந்தவனா? என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களது சிந்தனையில் ஏகத்துவத்தின் சிறப்பைப் பதியச் செய்தார்கள்.
இதனைத் தொடந்து அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குபவைகள் அனைத்தும் போலியானவை. அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அதுதான் சரியான மார்க்கம். என்ற கருத்துக்களை முன் வைத்தார்கள். (பார்க்க 12: 36-40)
இங்கே சிறைச்சாலையில் தன்னுடன் இருந்த வர்களிடமே யூசுப்(அலை) அவர்கள் பேச்சோடு பேச்சாக தஃவாவை முன்வைத்திருப்பதைக் காணலாம். இத்தகைய வாய்ப்புக்கள் அன்றாடம் அனைவருக்கும் ஏற்படலாம். தருணம் பார்த்திருந்து தக்க நேரத்தில் கருத்துக்களை முன்வைப்பதில் நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்
அழைப்புப்பணிக்காக தன்னால் முடிந்தவரை ஒத்துழைப்பு நல்குவதுகூட ஏற்றமான இபாதத்தாகவே திகழ்கின்றது. பின்வரும் இரண்டு சம்பவங்களும் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன.
ஒரு கிராமத்துக்கு அல்லாஹ் இரண்டு தூதர்களை அனுப்பினான். அவ்விருவரையும் அம்மக்கள் பொய்ப்படுத்தவே, மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். இருப்பினும் அம்மக்கள் நேர்வழிபெறவில்லை. மாறாக இந்தப் போதனையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்தே கொன்றுவிடுவோம் என்று தூதர்களை எச்சரிக்கின்றனர். தாக்கவும் முற்படுகின்றனர்.
அப்போது அந்த ஊரின் எல்லைப்புறத்திலிருந்து ஒருமனிதர் வருகிறார். அவருடைய பெயரை ஹபீ புன்னஜ்ஜார் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. அவர் வந்து தனது சமூகத்தவர்களைப் பார்த்து;
“மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் கூலியும் கேட்கவில்லை” என்றார். அப்போது ஊர்மக்கள் “நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?” என்று வினவுகின்றனர்.
“மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் கூலியும் கேட்கவில்லை” என்றார். அப்போது ஊர்மக்கள் “நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?” என்று வினவுகின்றனர்.
“என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காமல் இருக்கமுடியும். நீங்களும் மறுமையில் அவன் பக்கமே மீட்டப்படுவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை நான் வழிபடமாட்டேன். அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தைத் தர நாடிவிட்டால் இந்த போலி தெய்வங்களால் அதைத் தடுக்கமுடியாது. நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனை ஈமான் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள்” என்றார்.
ஆத்திரப்பட்ட மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். அவர் மரணித்ததும் “நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது” இப்பாதகத்தைச் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். (பார்க்க 36: 13-29)
இங்கே அந்த இறைதூதர்களின் முடிவு என்ன என்பது பற்றிக் கூறப்படவில்லை. தூதர்களின் தஃவாப் பணிக்குத்துணை நின்ற மனிதர் பற்றியே பேசப்படுகின்றது. சத்தியப் போதனைக்கு துணைநின்ற அவர் செய்த தியாகத்திற்கு கூலியாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குகிறான்.
ஆலிம்கள் அழைப்புப்பணி செய்தால், அதற்கு துணை நிற்பவர்களாக பொது மக்கள் செயல்பட முடியும். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, அவர் கூறுவதைக் கேட்க மக்களை அழைத்துவருவது, அவருக்குப் பாதுகாப்பளிப்பது, பக்கபலமாக இருப்பது, அவர் விடயத்தில் எல்லைகடந்து செல்பவர்களை அடக்குவது ஆகிய அனைத்துப் பணிகளும் அழைப்புப்பணியின் வட்டத்துக்குள் அடங்கக் கூடியவையே.
மற்றுமொரு நிகழ்ச்சியையும் இங்கே இதற்கான ஆதாரமாகக் கொள்ளமுடியும்.
மூஸா(அலை) பிர்அவ்னிடம் பிரச்சாரத்துக்காக சென்றார்கள். அப்போது பிர்அவ்னின் சபையில் அவனது குடும்பத்தைச் சேர்ந்த மறைமுகமாக ஈமான் கொண்ட ஒரு மனிதரும் இருந்தார். மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பிர்அவ்ன், “நான் மூஸாவைக் கொல்லப்போகிறேன்” என்றான்.
இந்த சந்தர்ப்பத்தில் ஈமானை மறைத்துக் கொண்டிருந்த அம்மனிதர் “அல்லாஹ்தான் என் இரட்சகன் எனக் கூறியதற்காகவா ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள். அத்தோடு அவர் உங்களது இரட்சகனிடமிருந்து அத்தாட்சிகளை வேறு கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லுகிறாரெனின் அவரது பொய் அவரோடே இருக்கட்டும். அவர் உண்மை சொல்லுபவராக இருந்து, அவரைத் தண்டித்து விட்டால் அவர் எச்சரிக்கை செய்வது போன்ற அழிவுகள் நமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கூறினார்.
தொடர்ந்து பிர்அவ்னிடம் பேசி, கொலை செய்யும் முடிவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்.
(பார்க்க 40: 28-44)
(பார்க்க 40: 28-44)
ஒரு அழைப்பாளனுக்கு ஆபத்து ஏற்படும் போது சாதுரியமாகப் பேசி அதிலிருந்து அவரைக் காத்த இந்த மனிதரை அல்லாஹ் எமக்குப் படிப்பினையாக அல்குர்ஆனில் நினைவு கூறுகின்றான். இவ்வாறு செயல்படுவது கூட தஃவாவில் ஒரு அங்கம்தான்.
எனவே, அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அது மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில் தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும் , மனித சமூகத்தையும் காக்கும் பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்.
இம்மாபெரும் பணியில் ஈடுபடும் பலரும் தஃவத் தப்லீகின் பெயரால் மார்க்கத்தை மறைக்கின்றனர். அது மட்டுமன்றி மறைப்பதுதான் சரியான தஃவத் அணுகுமுறை என்றுவேறு கூறி வருகின்றனர். இக்கருத்து எவ்வளவு தூரம் இஸ்லாமிய சிந்தனையை விட்டும் மாறுபட்டது என்பதைத்தொடர்ந்து நோக்குவோம்.
Subscribe to:
Comments (Atom)


